Friday, June 27, 2008

தமிழ் வாழ்க...!

_____கவிஞரேறு அமலதாசன்

உயிரான தமிழ்வாழ்கவே! - இன்ப
ஒளியோடு புவிமீதிலே - எங்கள்
உயிரான தமிழ்வாழ்கவே - எங்கள்
உயிரான தமிழ்வாழ்கவே...!


பயில்வோர்க்கு விடையாகும்
படைப்போர்க்குக் கொடையாகும்
குயில்பாட்டில் இசையாகும்
குழல்காட்டில் அசையாகும்
உயிரான தமிழ்வாழ்கவே! - இன்ப
ஒளியோடு புவிமீதிலே - எங்கள்
உயிரான தமிழ்வாழ்கவே...!

நாவேந்தர் தாலாட்ட
நாடெல்லாம் பாராட்டப்
பாவேந்தர் படைகூடிப்
பண்பாடிச் சீராட்டும்...
உயிரான தமிழ்வாழ்கவே! – இன்ப
ஒளியோடு புவிமீதிலே - எங்கள்
உயிரான தமிழ்வாழ்கவே...!

அழகோடுச் சிலம்பாட
அகம்மிஞ்சக் குறள்விஞ்ச
பழங்காலப் புகழ்ச்செல்வம்
பலவும்எம் இதழ்கொஞ்ச…
உயிரான தமிழ்வாழ்கவே! – இன்ப
ஒளியோடு புவிமீதிலே - எங்கள்
உயிரான தமிழ்வாழ்கவே...!

கன்னல்சொல் சுவையூட்டக்
கவிதையாழ் சுதிமீட்ட
மின்னல்போல் மனவானில்
மேலோங்கி ஈடேற்றும்...
உயிரான தமிழ்வாழ்கவே! – இன்ப
ஒளியோடு புவிமீதிலே - எங்கள்
உயிரான தமிழ்வாழ்கவே...!

வெய்யோனாய் ஒளிபாய்ச்சி
வீறேற்றும் உரமோச்சி
மெய்யாக எழுந்திங்கு
மென்மேலும் எமைஊக்கும்...
உயிரான தமிழ்வாழ்கவே! – இன்ப
ஒளியோடு புவிமீதிலே - எங்கள்
உயிரான தமிழ்வாழ்கவே...!

*************

No comments: