Tuesday, August 4, 2009

படித்தவர்கள் பாராட்டுகிறார்கள்...!

“தமிழுணர்வின் மொத்த உருவம் அமலதாசன்”

பிறப்பின் பயனே தமிழ் இலக்கியத்தைச் சுவைத்தலும் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடுதலுமே என்று நம்பி நடப்பவர் அவர். அமலதாசனின் சொல்லும் செயலும், மொழி இலக்கியம் பற்றிய விடாப்பிடியான போக்கும் அவரைப் பற்றிய இத்தகைய மதிப்பீட்டைச் செய்யத் தூண்டுகின்றன.

நாற்பது ஆண்டுகளாக திரு. அமலதாசன் கவிஞராக, தொண்டராக, தலைவராக, உணர்ச்சிமேலிடப் பேசும் பேச்சாளராக, தமிழுக்காக உரத்த குரல் கொடுப்பவராக, எழுத்தாளர்கழகத் தலைவராக நன்கு அறிமுகமானவர்.

“தமிழர் தலைவர் தமிழவேள்”, “புல்லாங்குழல்” அகிய இருநூல்களிலும் நான் போற்றும் சிறப்பியல்பு, அவற்றில் கவிஞர் பயன்படுத்தியுள்ள இயல்பான, எளிமையான இனிய தமிழ்நடை. சிங்கப்பூரின் பன்மொழிச் சூழலில் பேசிப் பழக அதிக வாய்ப்பின்றி, தமிழைத் தாய்மொழியாகக் கற்று, தேர்வு எழுதும் கட்டாயத்திலுள்ள வளரும் தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் தமிழில் அமலதாசன் கவிதைகள் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. வாய்விட்டுப் படித்துத் தமிழில் நாப்பழக்கம் எற்பட மாணவர்கள் இக்கவிதைகளைப் படித்துப் பயன்பெறலாம்.

திரு. அமலதாசனின் “புல்லாங்குழல்” கவிதைகளும், ‘தமிழர் தலைவர் தமிழவேள்’ கவிதைகளும் சிங்கப்பூர் சிந்தனை ஓட்டத்தில் உள்ளவை. குடியரசின் சமுதாயம், அரசு, மொழி, பலயினச் சூழல் என வெவ்வேறு துறைகளையும் தொட்டுப் பேசுவன. இதனால் படிப்போர், கவிதை கூறும் பொருளுடனும் அது எழுப்பும் உணர்வுகளுடனும் தங்களை இணைத்துக் கொண்டு கவிதைகளைச் சுவைக்க இயலும்..

திரு. அமலதாசன் எந்தப் பொது நிகழ்ச்சியில் பேசினாலும், தமிழவேளைப் பற்றிக் குறிப்பிடஅல்லது அவர் ஊட்டிய தமிழுணர்வையும் ஆற்றிய பணிகளையும் புகழத் தவறுவதில்லை.எனவே அவர் வெளியடும் முதல் நூல்களுள் ஒன்றாக ‘தமிழர் தலவர் தமிழவேள்’ அமைந்திருப்பது எதிர்பார்க்கக் கூடியதே. அதுவும் தமிழவேள் நூற்றாண்டு நிறைவு எழுப்பியநினைவலைகள் அடங்குமுன் இத்தகைய கவிதைநூல் பிறப்பது நல்லாக்கமே.

தமிழவேள் பற்றிய நூலில் அமலதாசன் கையாண்டிருக்கும் முறை சற்று வேறுபாடானது.நூலின் சரிபாதிக் கவிதைகள், தலைவராக வளர்ந்தவரின் புகழ் பாடுவதற்கு முன், சிங்கப்பூரின் வரலாற்றுப் பின்னணியையும் சமூக நிலைமைகளையும் எடுத்துரைக்கின்றன. இந்த உத்தி திரு. சாரங்கபாணீயின் பணித்திறனைக் கவிஞர் விவரிக்கும் போது நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது.

அடிக்கடி சமூகத்தைக் கேட்டுப்பார்த்து அலுத்துப்போன பாவலர் அமலதாசன், தாமே தமிழ வேளுக்கு எழுப்பியுள்ள மணிமண்டபமும் அழியாச் சிலையுமே “தமிழர்தலைவர் தமிழவேள், கவிதைப் படைப்பு“


__ செந்தமிழ்ச்செல்வர் வை. திருநாவுக்கரசு
மேனாள் தமிழ்முரசு ஆசிரியர்; தலைவர், வளர்தமிழ் இயக்கம்.
12 / 10 / 2004

Monday, August 3, 2009

“தமிழவேள் கொண்டான்” கவிஞரேறு அமலதாசன் (1939)

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மேனாள் தலைவர் (1987–2005); மதியுரைஞர் கவிஞரேறு அமலதாசன், மலேசியா கோலகுபுபாரு, “உலுகலிடோணியன்” என்னும் பால்மரத் தோட்டத்தில் பிறந்தார் (1939). தந்தையார் ஆபேல் ஆசிரியர்;கண்காணி, தாயார் சின்னத்தாய் என்னும் குழந்தையம்மாள். அப்பா ஆபேல், இரண்டாம் உலகப் போரின் போது (1942) தாய்லாந்து மரண ரயில்பாதை அமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் காலமானார். வளர்ப்புத் தந்தை அப்பு அவர்களின் அரவணைப்பில் வளர்ந்த கவிஞர். தோட்டப் பள்ளியில் தமிழும், ரவாங் “கிளைவ்” சிரம்பான் “நெகிரி செம்பிலான் டீச்சர்ஸ் யூனியன்” “ரீஜன்” பள்ளிகளில்.ஆங்கிலமும் கற்றார். .தமிழ்முரசு மாணவர் மணிமன்ற இதழின்வழி (1958) எழுத்துப் பயிற்சியை மேற்கொண்டார். 1960-இல் சிங்கப்பூருக்குக் குடிப்பெயர்ந்தார். திரேசாள் என்னும் பெயரிய தம் தாய்மாமன் மரியநாயகம் அவர்களின் மகளை, மணமுடித்தார். அமலதாசன் திரேசாள் இல்லறத்தினரின் செல்வங்கள்; லில்லிமேரி அமல், அருள்நாதன் அமல், அறவேந்தன் அமல்.

தொடர்ந்து தமிழ்நேசன்; தமிழ்மலர் நாளிதழ்கள்; மாதவி, திரையொளி போன்ற திங்களிதழ்கள், மேடைக் கவியரங்குகள்; சிங்கை வானொலி கவியரங்குகள்; தொலைக்காட்சி. நிகழ்ச்சிகள் என்று, பல தளங்களிலும் எழுதிப் புகழ்ப்பெற்றார். சிங்கப்பூர்த் தேசியக் கலைகள் மன்றத்தின் பன்மொழி ஆக்கப் பதிப்பு “சந்தங்கள்” சிங்கப்பூர்க் கவிதைகள் ஆயிரத்தாண்டு” தொகுப்பிலும், மற்ற அமைப்புகளின் சிறப்பு மலர்களிலும், கவிஞரேறுவின் கவிதைகள் கண்சிமிட்டுகின்றன. மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்னும் நூலில் பத்துத் தலைப்புகளில் கவிஞரின் கவிதைகள் மணம்பரப்புகின்றன. “அலைபாடும் கடலும்…” எனத்தொடங்கும் பாடல், 1975-ம் ஆண்டின், தேசியப் பாடல் போட்டியில் பாராட்டுப் பெற்ற சிந்திசைப் பாடலாகும். “பட்டமரம்” என்னும் கவிதை, சிங்கப்பூர் பெருவிரைவு ரயில் (MRT) வண்டியை அலங்கரித்தப் பெருமைக்குரியது. ‘தமிழுக்குப் பொற்காலம்’ என்னும் பாடல், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் மூன்றாம் பரிசுக்குரியப் பொற்பதக்கத்தைச் சூடிக்கொண்டது. “சிங்கப்பூர் என்று சொல்லும் போதிலே…” என்ற பாடல், 2005-இல் நடந்தேறிய தேசியப் பாடல் போட்டியில் முதல்பரிசை வென்றதுடன், தேசியநாள் கொண்டாட்டப் பேரணி அணிவகுப்பில், பல்லாயிரக் கணக்கான மக்கள்; தலைவர்கள் முன்னிலையில், இசைக்கோலம் கண்டு சாதனைப் படைத்தது.
தமிழவேள் கோ. சாரங்கபாணி; கவிவாணர் ஐ. உலகநாதன் ஆகியோரை உயிராக மதிக்கும் அமலதாசன், ஆங்கில மொழியாக்கத்துடன் கூடிய, “தமிழர் தலைவர் தமிழவேள்” “புல்லாங்குழல்” ஆகிய இரண்டு கவிதை நூல்களைத் தமிழுலகுக்கு வழங்கியிருக்கிறார். இவ்விரு நூல்களும் தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் வெளியீடுகள் கண்டன. சிங்கப்பூர் நூல்வெளியீட்டு வரலாற்றில் இது ஒரு சாதனை நிகழ்வாக பெயர்ப் பொறித்தது. ஏராளமான கவிதைகள் வடித்துள்ள கவிஞர், “கவிஞரேறு” “இனமானப் பாவலர்” “தமிழவேள் கொண்டான்” போன்ற சிறப்புப் பட்டங்களையும், “தமிழவேள் விருது” “பாரதியார்” “பாரதிதாசன்” விருது களையும், “பொதுப்பணி விருது”களையும் குவித்திருக்கிறார். தேசியப் புத்தக மேம்பாட்டு வாரியத்தின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 2006 போட்டியில், “புல்லாங்குழல்” தகுதிச் சான்றுதல் பெற்றிருக்கிறது. சிங்கப்பூர் சிம் பல்கலைக் கழகத்தின், பி.ஏ. வகுப்புக்கான பாடப் புத்தகத்தில், கவிஞரின் கவிதைகள் சிறகு விரிக்கின்றன. சிங்கப்பூர்க் கலைக் களஞ்சியத்தில், கவிஞரின் இலக்கிய, சமூகப் பங்களிப்புப் பற்றியக் குறிப்புகள் அச்சாகி அணிசெய்கின்றன.
நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாய் திரு.அமலதாசன் கவிஞராக, தொண்டராக, தலைவராக, உணர்ச்சி மேலிடப் பேசும் பேச்சாளராக, தமிழுக்காக உரத்த குரல் கொடுப்பவராக, நன்கு அறிமுகமானவர். தமிழர் திருநாள் விழாக்குழு, திருவள்ளுவர் நூலகம், மாதவி இலக்கிய மன்றம், குடியரசின் வெள்ளிவிழா தொடர்பான இந்தியர் பண்பாட்டு மாத தமிழ்மொழிக் கொண்டாட்டக்குழு, தமிழ்மொழி வாரம் ஏற்பாட்டுக்குழு, தமிழர் பேரவை, தேசியப் புத்தக மேம்பாட்டு வாரியம் போன்ற அமைப்புகளின்வழி, பல்வேறு பொறுப்புகள் வகித்து, முத்திரைப் பதித்தவர்.

சிகரப் பொறுப்பாக, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவராகப் பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றி, கழகத்தை உச்சத்தில் கொண்டு நிறுத்தியவர். தமிழவேள் விருது உருவாக்கி, எழுத்தாளர் பலர்க்கும் வழங்கியவர். நூல் வெளியீடுகள்; கவியரங்குகள்; சொற்பொழிவுக் கூட்டங்கள் நடத்தி, இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டவர். நாட்டுப்பற்று, மொழியுணர்வு, இனமானம் மிக்கவர் நம்கவிஞர்.

Sunday, May 31, 2009

செந்தமிழாய் “மணக்க வாழி” !

செந்தமிழாய் “மணக்க வாழி” !

___ கவிஞரேறு அமலதாசன்

(17/05/2009 மாலை 6.30 மணிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்தின், 16வது மாடியிலுள்ள அரங்கத்தில் நடந்தேறிய, முனைவர் இரத்தின வெங்கடேசன் அவர்களின்,
“புதுச்சேரித் தமிழ்க் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழாவில்,
படித்தளித்த வாழ்த்துப்பா)

பால்வடியும் பவளமுகம்! விண்மீன் கண்கள்!
பரிதிநிறம்! அடிக்கரும்பாய் இனிக்கும் வார்ப்பு!
நூல்பிடித்த வீரநடை! நட்புத் தென்றல்!
நுண்ணறிவு மொழிவீச்சு! செஞ்சொல் பேச்சு!
ஆல்போலும் நிழல்விரிப்பு! அன்புத் தோப்பு!
அழகுமணி இரத்தினமாம் வெங்க டேசர்;
சால்பெல்லாம் பேறெல்லாம் வந்த ணைக்கச்
சந்தனமாய்ச் செந்தமிழாய் “மணக்க வாழி”!

காற்றடிக்கும் நேரத்தைக் கணக்கிட் டாய்ந்து
கைகாட்டும் மணிகாட்டி! இளைய ரென்னும்
நாற்றங்கால்; வேர்ப்பிடித்து விளைக்கத் தூண்டும்
நல்லுழவர்! நீர்வரத்து! உரத்தின் ஊட்டம்!
மாற்றாரைத் தமராக்கும் மனித நேயர்!
மரபுகளை அரவணைக்கும் மாட்சி மிக்கார்!
சான்றாண்மை மிகும்முனைவர் வெங்க டேசர்;
சந்தனமாய்ச் செந்தமிழாய் “மணக்க வாழி”!

கொட்டுகின்ற கருத்துமழை! இலக்கி யத்தேன்!
குறள்பொழியும் மலையருவி! கொழிக்கும் செல்வம்!
பட்டிமன்ற நாட்டாண்மை! வைக்கம் வென்ற
பாசறைவாள்! இலட்சியத்தேர்! கொள்கைக் கோட்டம்!
“வட்டாரம் மேல்கீழென்” றார்ப்ப ரித்து
வாயடியும் கையடியும் செய்வோ ரெல்லாம்;
கட்டாயம் மனம்திருந்த உணர்த்தும் செம்மல்!
கவியமுதாய்த் தனித்தமிழாய் “மணக்க வாழி”!

********************************

Tuesday, September 9, 2008

தலைவா….!

_________கவிஞரேறு அமலதாசன்



உனையன்றி துணையுண்டோ தலைவா ? – சுடர்
ஒளியாக உலகெல்லாம் அரசோச்சும் இறைவா !
உனையன்றி துணையுண்டோ தலைவா ?

வினைத்தீர்க்கும் பொருளேநீ “ வருவாய் “ - தலை
விதிநீக்கி; மனம்ஊக்கி; விளைவாக்கி: அருள்வாய் !
உனையன்றி துணையுண்டோ தலைவா ?

புலமைக்கும் திறமைக்கும் புகழில்லாக் காலம் !
பொறுமைக்கும் பணிவுக்கும் பொருந்தாத ஞாலம் !
நிலத்துக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட எல்லை !
நினைவுக்கும் செயலுக்கும் இருக்கின்ற தொல்லை !
உனையன்றி துணையுண்டோ தலைவா ?

சீர்தேடிப் பித்தர்கள் அலைகின்றார் வண்டாய் !
சிறுமைக்கும் பெருமைக்கும் பொருளறியா மண்டாய் !
நேரெல்லாம் நிறையெல்லாம் நீபடைத்தப் பாக்கள் !
நீள்வண்ணத் தோட்டத்தில் எல்லாமெம் பூக்கள் ?
உனையன்றி துணையுண்டோ தலைவா ?

வேரெல்லாம் நீராட விமலக்கை நீட்டு !
விண்தேடும் பறவைக்கும் திசைக்காட்டி ஊட்டு !
ஊரெல்லாம் உறவாக உண்மையை நாட்டு !
ஒளிச்சுடரே; வளிமலரே; உயிர்மணியைக் காட்டு !
உனையன்றி துணையுண்டோ தலைவா ?

*****************

Friday, August 22, 2008

தொப்பையில்...!

_____கவிஞரேறு அமலதாசன்



குப்பையைக் கொறித்திட்டுக்

கொக்கரிக்கும் கோழியெலாம்

குன்றிமணி அருமையை

அறியுமோ ?



தொப்பையில் கழிவன்றி ;

தும்பையும் வைரமும்

துங்கமணி மாலையும்

ஒளிறுமோ ?

******

மூர்க்கப்போர்..!

______கவிஞரேறு அமலதாசன்


புற்றுறைப் பாம்பும் ; நுண்மைப்

புலன்தூண்ட மகுடிக் காடும் !

கற்களும் கருணை பொங்கக்

கசிந்தே; நீர்ச் சுரந்துப் பாடும் !

நற்குணப் பண்புச் சூழும்

ஞாலத்தில் அமைதி வாழும் !

முற்றிய விஞ்ஞா னத்தால்

மூள்தல்என் ? மூர்க்கப் போரே !

******